காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஆணையாளர் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐ.நா மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச வழிகாட்டல்களுக்கு அமையச் செயல்படும் இந்த அலுவலகம், எந்தவொரு தரப்பிற்கும் சாதகமாகச் செயல்படாத ஒரு சுயாதீனமான ஆணைக்குழுவாகும். பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையைக் கண்டறிந்து, தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே இதன் முதன்மை நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.
தற்போது மக்கள் மத்தியில் ஓ.எம்.பி-யின் செயல்பாடுகள் குறித்து அதிக நம்பிக்கை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, மாவட்ட ரீதியாக நடத்தப்படும் அமர்வுகளில் தினசரி அழைப்பு விடுக்கப்படும் 100 பேரில் 85-க்கும் அதிகமான குடும்பங்கள் நேரில் வந்து தமது சாட்சியங்களையும் தகவல்களையும் வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
