மீகமுவ சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தமைக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, இன்றைய (08) பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டை அணிந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சிறை மோதலில் ஏழு சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை முன்னிட்டு, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், இறந்தவர்களுக்கு நீதி கோரியும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கறுப்புப் பட்டை அணிந்து பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தனர்.
விசாரணைக் குழு நியமனம்:
இதற்கிடையில், ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மீகமுவ சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவையின் அனுமதியுடன் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் இயங்கும் இந்த மூவர் கொண்ட குழுவில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மோகன் வீரகோன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த விசாரணைக் குழுவின் செயலாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கே.எல்.டி. அசலா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
