‘நீட்’ வினாத்தாள் கசிவு தொடர்பாகத் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகின்றன. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போராட்டத்திற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வினாத்தாள் கசிவு விவகாரம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன் எனத் தெரிவித்துள்ளார்.
மறுதேர்வு மற்றும் புதிய சட்டம்:
கடந்த இரண்டரை மாதங்களில் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வியாண்டு வீணாகாமல் தடுப்பதை உறுதி செய்வதுதான் எங்களின் முதன்மையான பொறுப்பாக இருந்தது. இதனால் தான், தேர்வுகளை விரைவாக நடத்துவது மிக அவசியமாக இருந்தது. 22 லட்சம் மாணவர்களுக்கான தேர்வுகளை மிக குறுகிய காலத்தில் நடத்த அரசு தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்தியது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் வெற்றி மற்றும் மகிழ்ச்சி குறித்த செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதோடு திருப்தி அடைந்து அமைதியாக இருப்பவர்கள் நாங்கள் அல்ல. இதனால் தான், வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுரை வழங்கினேன்.
வரைவுத் திட்டம் தயார்:
துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை உழைத்து, அதற்கான வரைவுத் திட்டத்தை என்னிடம் சமர்ப்பித்துள்ளனர். விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான அம்சங்களைக் கொண்ட இந்த வரைவுத் திட்டம், இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அமைச்சரவை சகாக்களின் ஆலோசனைகளைக் கேட்டு, அது பற்றி இறுதி செய்யப்படும். வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதாவைச் சபையில் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
விரைவு நீதிமன்றத்திற்கு உத்தரவு:
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி வினாத்தாள் கசிவு பற்றி விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி, நேற்று நள்ளிரவில் விரைவு நீதிமன்றம் அமைப்பதற்கான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இந்த வீடியோவில் பேசியுள்ளார்.
