கொழும்பு (தமிழ்முரசு NEWS); இலங்கையின் நிதி அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற பாரிய சைபர் கொள்ளைச் சம்பவம், ஆஸ்திரேலியாவுடனான இலங்கையின் நிதித் தொடர்புகளில் முறைகேடுகளை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் கொடுப்பனவுகள் தொடர்பான முறைகேடுகள் குறித்து கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனநாயகக் கடமையில் முறைகேடு:
‘X’ சமூக வலைத்தளத்தில் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவின்படி, இலங்கை அதிகாரிகள் இந்த மோசடி குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கி வருவதோடு, இரு நாடுகளும் இணைந்து இந்த குற்றச் செயலின் பின்னணியைக் கண்டறியச் செயற்பட்டு வருகின்றன.
இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஆதரவை ஆஸ்திரேலியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை, இந்த விசாரணைக்கு இரு நாடுகளும் வழங்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
சைபர் ஊடுருவலின் பின்னணி:
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் சைபர் ஊடுருவலாளர்கள் (Hackers) அத்துமீறி நுழைந்துள்ளமை ஏப்ரல் 22 அன்று அமைச்சினால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஊடுருவல் ஜனவரி 2026 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்தே கண்டறியப்பட்டது.
சட்ட நடவடிக்கைகளின் அடுத்தகட்டங்கள்:
இந்த பாரிய சைபர் கொள்ளை தொடர்பாக இலங்கை கணினி அவசரக்கால பதிலளிப்புக் குழு (SL‑CERT) மற்றும் இலங்கை காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அமைச்சு உடனடியாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு (FIU) ஆகியவற்றில் உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஊடுருவலாளர்களைக் கண்டறியவும், திருடப்பட்ட நிதி தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் சிஐடி விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
