சென்னை: மலையாள திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலேயே மிகச்சிறந்த நடிகையாகவும், அதைவிட மிகத்துணிச்சலான பெண்ணாகவும் அறியப்படுபவர் நடிகை பார்வதி திருவொத்து. தமிழில் ‘பூ’, ‘மரியான்’, சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ எனத் தன் நடிப்பால் முத்திரை பதித்தவர். திரைத்துறையில் பெண்களுக்கு எதிராகவும், விளிம்புநிலை மக்களுக்கு எதிராகவும் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பார்வதி, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட நரக வேதனைகளைப் பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளார்.
சாதாரண செயல்.. அசாதாரண எதிர்ப்புகள்!
அந்த நிகழ்ச்சியில் பார்வதி பேசும்போது, “நான் செய்தது ஒன்றும் பெரிய சாதனை இல்லை. ஒரு பொறுப்புள்ள மனிதராகச் செய்ய வேண்டிய அடிப்படை விஷயத்தையே செய்தேன். ஆனால் அதற்காக நான் சந்தித்த தாக்குதல்கள் மிகக் கொடுமையானவை” என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.
2017-ஆம் ஆண்டு கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, பார்வதி திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மிகத் தீவிரமாகப் பேசத் தொடங்கினார். அன்றிலிருந்து தான் அவருக்கான நரகம் ஆரம்பமானது.
மிரட்டல்களுக்கு அஞ்சாத ‘பூ’
“என்னை மிரட்டினார்கள். கொலை மிரட்டல்கள் வந்தன. அதற்கும் மேலாக, பாலியல் வன்கொடுமை மிரட்டல்களும் (Rape Threats) வந்தன. சிலர் எப்படியாவது என் குரலை அடக்க வேண்டும் என்று வெறியுடன் முயன்றார்கள். ஆனால், நான் ஒருபோதும் பின்னடையவில்லை” என அவர் உருக்கமாகக் கூறினார். தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றதால், அவர் பல இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
இழந்த பட வாய்ப்புகள்; கிடைத்த பாடம்!
பெண்களின் உரிமை மற்றும் சமத்துவத்திற்காகக் குரல் கொடுத்ததற்காகத் தன் சினிமா வாழ்க்கையிலேயே பாதிப்புகளைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். “எனது அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகள் காரணமாக, பல பெரிய பட வாய்ப்புகளை நான் இழந்தேன். பல கதவுகள் எனக்காக மூடப்பட்டன. ஆனால் பின்னர் தான் புரிந்துகொண்டேன்… அந்த வாய்ப்புகள் எனக்கானவை அல்ல” என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார். இது திரைத்துறையில் கருத்துச் சொல்லும் பெண்கள் இன்னும் எவ்வளவு அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் போட்டுடைப்பதாக உள்ளது.
மீட்டு எடுத்த குடும்பமும், நண்பர்களும்!
எத்தனை மிரட்டல்கள், வெறுப்புப் பிரசாரங்கள் வந்தாலும் தன்னை மனதளவில் சிதையாமல் காப்பாற்றியது தன் குடும்பமும் நண்பர்களும் தான் என பார்வதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். “எனக்கு ஆதரவாக நிற்கும் அம்மா, அப்பா, சகோதரன் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் தனியாக இல்லை என்ற உணர்வு தான் என்னை முன்னோக்கி நகர்த்தியது” என்று கூறியுள்ளார். மேலும், பெண்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஆதரவு வட்டமும் (Support System) தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
யார் இந்த பார்வதி?
2006-ஆம் ஆண்டு அறிமுகமான பார்வதி, கிளாமர் அல்லது கமர்சியல் வெற்றியை மட்டும் நோக்காமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கனமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதிலேயே எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார். பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றுள்ள அவரது இந்தச் சமீபத்திய பேச்சு, சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
“அனைவரும் அமைதியாக இருந்தபோது பேச தைரியம் காட்டியவர் பார்வதி”, “திரையுலகில் பெண்களுக்கான குரலாக தொடர்ந்து நிற்பவர்” எனப் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சர்ச்சைகளைத் தவிர்த்து அமைதியாகச் செல்லும் சினிமா உலகில், தன்னுடைய நிலைப்பாட்டைத் தொடர்ந்து துணிச்சலாகக் கூறி வரும் பார்வதி திருவொத்து, மீண்டும் ஒருமுறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
