மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயாங்க ஹேமபால ஆகியோர் தத்தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை அவர்கள் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் பட்சபாதமற்ற மற்றும் சுதந்திரமான விசாரணைக்கு வசதி செய்யும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தியில் முறைகேடுகள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார்.
அதற்கிணங்க, ஆணைக்குழுவின் பணிகள் எந்தவித செல்வாக்கும் அல்லது தடையுமின்றி அதன் சுதந்திரமான விசாரணை செயல்முறையை முன்னெடுப்பதை உறுதி செய்வதற்காக அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், நிலக்கரி விநியோகம் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவை நியமிக்க எடுத்த முடிவைத் தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் குமார ஜயகொடி குறிப்பிட்டுள்ளார். இது ஊழலுக்கு எதிரான பொதுமக்களுக்கும் ஜனாதிபதியின் ஆணைக்கும் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
வரவிருக்கும் விசாரணைகள் சுதந்திரமாகவும் பக்கச்சார்பின்றியும் நடத்தப்பட வேண்டும் என்று அவர் நம்புவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விசாரணையின் போது அவர் பதவியில் நீடிப்பது தடையாகக் கருதப்படலாம் என்பதால், இன்று (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அவர் வலியுறுத்தியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயாங்க ஹேமபால தனது கடிதத்தில், விசாரணைகளை ஆரம்பிக்க வசதியாகவும், அவை சுதந்திரமாக நடத்தப்படுவதை உறுதி செய்யவும் தனது ராஜினாமா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் பதவியிலிருந்து விலகுவது ஒரு வெளிப்படையான செயல்முறைக்குத் தேவையான இடத்தை வழங்கும் என்ற கருத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
