ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்று (03) சந்தித்துப் பேசினார். அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் தமிழ் பேசும் சமூகங்களைப் பாதிக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு, நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் தொடர்பான கவலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மாகாண சபைத் தேர்தல் பிரச்சினை குறித்துப் பேசுகையில், தேர்தலை நடத்துவது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எழுப்பப்பட்ட விடயங்கள் குறித்து அந்தக் குழுவுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது உள்ளிட்ட அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் அரசாங்கம் உறுதியாக உள்ளதை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார். எனினும், அவசரமாக தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுப்பதை விட, பரந்த தேசிய இணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புவதே தற்போதைய முக்கிய முன்னுரிமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பின் போது, இலங்கைத் தமிழ்க் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசியலமைப்பு உள்ளடக்கிய தேசிய கலந்துரையாடலின் மூலம் உருவாக வேண்டும் என்றும், ஒரு அரசியல் கட்சியால் ஒருதலைப்பட்சமாக அறிமுகப்படுத்தப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 10 பேர்ச் குடியிருப்பு காணித் துண்டுகளின் சட்டப்பூர்வ உரிமையை வழங்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு உட்பட, மலையக சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அரசுடனான பெருந்தோட்ட குத்தகை ஒப்பந்தங்கள் 2042க்கு முன் புதுப்பிக்கப்படும் போது, மலையக சமூகத்திற்கு குடியிருப்பு காணிகளுக்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கும் விதந்துரைகளை சேர்க்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மலையக சமூகத்திற்கான வீட்டுத் திட்டங்கள் மற்றும் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இரு கட்டங்களாக 13,000 வீடுகளை அமைப்பதற்கு 2027 மற்றும் 2028 வரவு செலவுத் திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிரந்தர வீடுகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும், நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் வாடகை உதவிகள் தொடரும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மாகாண சபை தேர்தல் முறைமை, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயற்பாடுகள், காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கவலை வெளியிட்டனர்.
சந்திப்பின் முடிவில், நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடலின் மூலம் தீர்வு காண்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தினார். பரந்த தேசிய நலனுக்குப் பயன்படும் தீர்வுகளை முன்னெடுக்குமாறு அரசியல் பிரதிநிதிகளை அவர் ஊக்குவித்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
