வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எசல பெரஹராவின் இறுதி மாபெரும் ஊர்வலத்தை (Randoli Perahera) புதன்கிழமை இரவு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இணைந்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பார்வையிட்டார். இந்த வருடாந்த மகோற்சவம் இலங்கையின் கலாசார பாரம்பரியம் மற்றும் தேசிய ஒற்றுமையின் சின்னம் என அவர் விவரித்தார்.
பெரஹராவைப் பார்வையிடுவதற்கு முன்னதாக, ஜனாதிபதி கிரிவெஹர ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்து, ருஹுணு மாகம்பத்துவவின் பிரதம சங்கநாயக்கரும் கிரிவெஹர விகாராதிபதியுமான அதிவணக்கத்திற்குரிய கோபாவக்க தம்மின்ன தேரோவிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றார். அங்கு சமய வடைபாடுகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மங்கல யானை மீது புனித தாதுப் பேழையை வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டதுடன், கிரிவெஹர விகாரை வளாகத்தின் மின்விளக்கு அலங்காரத்தையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
பெரஹரா ஊர்வலத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி திஸாநாயக்க, நாட்டின் அடையாளத்தை வரைறுக்கும் வரலாற்று மற்றும் கலாசார அடித்தளங்களைப் பேணிப்பாதுகாக்கும் அதே வேளையில், இலங்கை அபிவிருத்தியை நோக்கிய தனது பயணத்தைத் தொடர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நாட்டின் முதன்மையான கலாசார மற்றும் மத விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் ருஹுணு கதிர்காம எசல பெரஹரா, மக்களுக்கும், அவர்களது கலாசார பாரம்பரியத்திற்கும் மற்றும் தாய்நாட்டிற்கும் இடையிலான நீடித்த பிணைப்பைப் பிரதிபலிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டு மில்லினியங்களுக்கும் மேலாக இந்த விழா தடையின்றி அனுசரிக்கப்பட்டு வருவது இலங்கையின் நாகரிகத்தின் பின்னடைவை நிரூபிக்கிறது என்றும், இளைஞர்களின் பலத்த பங்கேற்பு, எதிர்கால சந்ததியினர் நாட்டின் மரபுகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பதற்கான சான்றாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
தேசிய ஒற்றுமையின் சின்னம் என்ற வகையில் இந்த விழாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், பல்வேறு மத மற்றும் இன சமூகங்களைச் சேர்ந்த பக்தர்களின் பங்கேற்பைச் சுட்டிக்காட்டினார். தமிழ் யாத்ரீகர்கள் பாரம்பரியமாக ஒரு வார கால ‘பாத யாத்திரை’யை கதிர்காமத்திற்கு மேற்கொள்கின்றனர், அதே நேரத்தில் முஸ்லிம் மற்றும் சிங்கள பக்தர்களும் திருவிழாவின் போது அந்தந்த மத மரபுகளைப் பேணுகின்றனர், இது அமைதி மற்றும் சகவாழ்வு சூழலில் நாடு முழுவதிலுமிருந்து மக்களை ஒன்றிணைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
வருடாந்த பெரஹராவுடன் தொடர்புடைய மத மற்றும் கலாசார மரபுகளைப் பாதுகாப்பதில் தலைமைத்துவம் வகித்த அதிவணக்கத்திற்குரிய கோபாவக்க தம்மின்ன தேரோவுக்கு ஜனாதிபதி திஸாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க மற்றும் இந்த ஆண்டு விழாவை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்ட அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
ஜனாதிபதி பின்னர் 2026 எசல பெரஹராவின் உத்தியோகபூர்வ நிறைவைக் குறிக்கும் பிரகடனத்தை கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதியிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, மொனராகலை மாவட்டச் செயலாளர் ஏ.ஜி. நிஷாந்த, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே மற்றும் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
