சுற்றுலா விசாக்கள் மூலம் துபாய் மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்பி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் “துபாய் சுத்தா” என அழைக்கப்படும் நபர் கடுவெலயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 7 இலட்சம் ரூபாவை பெற்று மோசடி செய்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இன்று (01) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளைக் கண்டதும் சந்தேகநபர் தனது காரில் தப்பிச் செல்ல முற்பட்ட போதே மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புலத்சிங்கள பிரதேச சபை உறுப்பினரான இவர், சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த மோசடி வலையமைப்பை நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுற்றுலா விசா மூலம் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வலையமைப்பின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் இவர், இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக முன்னரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார்.
சந்தேகநபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். முறையான அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு ஆட்களைச் சேர்ப்பது சட்டவிரோதமானது என எச்சரித்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இவ்வாறான மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது விசேட புலனாய்வுப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
