எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த புதன்கிழமை கூடிய பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகப் பாராளுமன்றத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புத் தொடர்பில் அமைச்சர் தனது பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றத் தவறியதாகத் தெரிவித்தே இந்தப் பிரேரணை எதிர்க்கட்சியினரால் கடந்த 21 ஆம் திகதி சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகி, 11:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும். இதனால், இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணைகள் பிறிதொரு திகதியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
