இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய கால்பந்து வீரரான நிஷான் வேலுப்பிள்ளை, 2026 ஆம் ஆண்டுக்கான பிபா (FIFA) உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் 26 பேர் கொண்ட அவுஸ்திரேலிய இறுதி அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலக கால்பந்து அரங்கின் மிகப்பெரிய தொடரில் இலங்கை வம்சாவளி வீரர் ஒருவர் இடம்பிடித்துள்ளமை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மெல்போர்ன் விக்டரி (Melbourne Victory) அணிக்காக விளையாடும் 24 வயதான விங்கரான நிஷான் வேலுப்பிள்ளையை, உலகக் கிண்ணத் தொடருக்காக அவுஸ்திரேலிய சொக்கரூஸ் (Socceroos) அணியின் பயிற்றுவிப்பாளர் டோனி போபோவிக் தனது அணியில் உத்தியோகபூர்வமாக இணைத்துள்ளார். இம்முறை உலகக் கிண்ணத் தொடரானது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
மெல்போர்னில் பிறந்த நிஷான் வேலுப்பிள்ளையின் தந்தை, இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மலேசியர் ஆவார்; அத்துடன் அவரது தாய் ஆங்கிலோ-இந்தியப் பின்னணியைக் கொண்டவராவார். அவுஸ்திரேலியாவின் இளம் மற்றும் திறமையான கால்பந்து வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள நிஷான், 2026 உலகக் கிண்ணத் தகுதிச்சுற்றில் சீனாவுக்கு எதிரான தனது அறிமுக சர்வதேசப் போட்டியிலேயே கோல் அடித்து அசத்தியிருந்தார். அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறும் பயணத்தில் இவர் மிக முக்கிய பங்காற்றியிருந்தார்.
இம்முறை உலகக் கிண்ணத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய தலைமுறை அவுஸ்திரேலிய அணியில், நிஷான் வேலுப்பிள்ளை உட்பட 17 புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். புலம்பெயர் பின்னணியைக் கொண்ட இளம் விளையாட்டு வீரர்களுக்கு இவருடைய இந்த மாபெரும் சாதனை ஒரு சிறந்த உத்வேகமாக அமைந்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியில் நிஷான் இடம்பிடித்துள்ளமையானது, உலகெங்கிலும் உள்ள இலங்கை மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், அளப்பரிய பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
