துபாய்: கிரிக்கெட் உலகின் மாபெரும் போட்டியான இந்தியா – பாகிஸ்தான், ஆசியக் கோப்பை T20 தொடரில் மீண்டும் ஒருமுறை அரங்கேறவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த அனல் பறக்கும் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) துபாயில் நடைபெறவுள்ளது.
நடப்பு சம்பியனான இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வலுவான நிலையில் உள்ளது. பாகிஸ்தான் அணியும், சமீபத்தில் ஆப்கானிஸ்தான், அமீரகம் உடனான முத்தரப்புத் தொடரை வென்று நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
இரு அணிகளும் இதுவரை T20 சர்வதேசப் போட்டிகளில் 13 முறை மோதியுள்ள நிலையில், இந்தியா 10 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அரசியல் காரணங்களால் இருதரப்புத் தொடர்கள் நடைபெறாத நிலையில், ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் மோதுவதால், இந்தப் போட்டிக்கு எப்போதும் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.
லீக் சுற்றைத் தாண்டி, சுப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகளும் மோத வாய்ப்புள்ளதால், ஒரே தொடரில் மூன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கலாம்.
