சென்னை: தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைத் தொடரில் போட்டித்தன்மையே இல்லை என்றும், இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடிய அணிகளே இல்லை எனவும், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது யூடியூப் பக்கத்தில் இது குறித்துப் பேசிய அவர், “தொடரைச் சுவாரஸ்யமாக்க, தென்னாப்பிரிக்கா அல்லது இந்தியா ‘ஏ’ அணியையாவது சேர்க்க வேண்டும்,” என்றார். மேலும், “வங்கதேசம் குறித்துப் பேச ஒன்றுமே இல்லை. ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு சவாலாக இருந்தாலும், அவர்களால் 170 ஓட்டங்களுக்கு மேல் சேஸ் செய்ய முடியாது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அஸ்வினின் இந்தக் கருத்தை, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி ஆகா ஆகியோர் மறுத்துள்ளனர். “ஒவ்வொரு அணியும் இங்கு போட்டியிடவே வந்துள்ளது. T20 கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம்,” என அவர்கள் கூறியுள்ளனர்.
