முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (27) காலை 9.00 மணிக்கு நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ‘சிறிலிய’ (Siriliya) என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் போதே இது தொடர்பான விசாரணைகள் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
நாமலுக்கும் அழைப்பாணை
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (26) அவரை அங்கு முன்னிலையாகுமாறு கோரப்பட்டிருந்தது.
எனினும், நாமல் ராஜபக்ச தற்போது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளதால், அவரால் நேற்றைய தினம் முன்னிலையாக முடியவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
