ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாக, இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான எயார் இந்தியா (Air India), எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) மற்றும் இண்டிகோ (IndiGo) ஆகியன இன்று (மே 1) முதல் கத்தாரில் உள்ள ஹமாட் சர்வதேச விமான நிலையத்தில் (Hamad International Airport – DOH) முழு அளவிலான தமது விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளன. இதன் மூலம் தோஹாவுக்கும் இந்தியாவின் பல்வேறு பிரதான நகரங்களுக்கும் இடையிலான தொடர்பு மீண்டும் சீரடையவுள்ளது.
ஈரானிய தலைமை மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு கடந்த பெப்ரவரி 28, 2026 அன்று தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபுரி’ (Operation Epic Fury) என்ற கூட்டு அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையினைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய பிராந்திய மோதல்களின் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது இந்த மீள்திறப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தோஹாவிலுள்ள இந்திய தூதரகம் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹமாட் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் விரிவடைந்து வரும் நிலையில், எயார் இந்தியா, எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ ஆகிய இந்திய விமான நிறுவனங்கள் மே 1, 2026 முதல் தோஹா மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு இடையிலான தமது விமான சேவைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது. எனினும், மத்திய கிழக்கின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, விமான அட்டவணைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக்கு உட்பட்டது எனவும், பயணிகள் தங்களது பயண நேரம் மற்றும் விமான நிலை குறித்து உடனுக்குடன் அறிந்துகொள்ள விமான நிறுவனங்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த மோதலில் கட்டார் ஒரு மத்தியஸ்தராக செயற்பட்ட போதிலும், கடந்த மார்ச் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஈரானிய தாக்குதல்களால் கட்டாரின் ராஸ் லாஃபானில் (Ras Laffan) உள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி திறனில் 17% பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக கட்டாரின் வான்வெளி வணிக ரீதியான போக்குவரத்துக்கு பெருமளவில் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஏப்ரல் நடுப்பகுதியில் இஸ்லாமாபாத்தில் எட்டப்பட்டு சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பால் (President Trump) நீடிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தமானது, பிராந்தியத்தில் சர்வதேச வர்த்தக விமான சேவைகள் மீண்டும் செயல்பட போதுமான பாதுகாப்பை வழங்கியுள்ளது. இந்த விமான சேவைகளின் வருகையானது, பிராந்தியத்தின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
