ஹொரணையில் உள்ள மக்கள் வங்கி (People’s Bank) கிளையொன்றில் அண்மையில் 35 மில்லியன் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே, இவர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை காலை ஹொரணை மக்கள் வங்கி கிளையிலிருந்து ஏ.டி.எம் (ATM) இயந்திரங்களில் நிரப்புவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 35 மில்லியன் ரூபா பணமே இவ்வாறு இனம் தெரியாத நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.
வங்கி ஊழியர் ஒருவர் இரண்டு பைகளில் பணத்தை எடுத்துக்கொண்டு, போக்குவரத்திற்காக வங்கியின் பின்பக்கக் கதவு வழியாக வெளியே சென்ற போதே இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
