டிட்வா’ (Ditwah) புயலால் கடுமையாகச் சேதமடைந்த கடுகண்ணாவை மற்றும் ரம்புக்கனைக்கு இடையிலான கண்டி – கொழும்பு பிரதான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கை இன்று (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் தடைபட்டுள்ள நிலையில், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு ரயில் பெட்டிகள் ரயில் வலையமைப்பிலிருந்து அகற்றப்பட்டு, கண்டியிலிருந்து பேராதனை ரயில் நிலையத்திற்கு வீதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன.
இந்த நடவடிக்கையின் சிறப்பம்சமாக, ரயில் பெட்டிகளை நகர்த்துவதற்கு இலங்கையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பாரிய போக்குவரத்து லொறி (heavy-duty transport truck) பயன்படுத்தப்பட்டமையானது, உள்ளூர் பொறியியல் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த இரண்டு பெட்டிகளும் தற்போது வெற்றிகரமாகப் பேராதனை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதேவேளை, புனரமைப்புப் பணிகள் தொடரும் நிலையில், அதே பாரிய போக்குவரத்து வாகனத்தைப் பயன்படுத்தி ரயில் இயந்திரத்தையும் (locomotive) பேராதனைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
