மன் கி பாத்’: ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குப் புகழாரம், உள்ளூர் பொருட்களை வாங்க பிரதமர் மோடி வேண்டுகோள்!
புதுடெல்லி: தனது மாதாந்த ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் நேற்று (28) உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100 ஆண்டு கால பயணத்தைப் பாராட்டியதுடன், பண்டிகைக் காலத்தில் உள்ளூர் தயாரிப்புகளையே வாங்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
வரவிருக்கும் விஜயதசமி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிப்பதாகக் கூறிய அவர், “தியாகம், தன்னலமற்ற சேவை மற்றும் ஒழுக்கமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உண்மையான பலம். ‘தேசமே முதலில்’ என்ற உணர்வு அவர்களின் ஒவ்வொரு செயலிலும் மேலோங்கி இருக்கிறது,” என்றார்.
“இந்த பண்டிகை காலத்தில், ‘சுதேசி’ பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்,” எனக் கேட்டுக்கொண்ட பிரதமர், அக்டோபர் 2ஆம் திகதி காந்தி பிறந்தநாளன்று, காதிப் பொருள் ஒன்றையாவது வாங்குமாறு வலியுறுத்தினார். மேலும், ‘சாத்’ விழாவை யுனெஸ்கோவின் கலாசாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
