இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர், இலங்கையில் அவரது இராஜதந்திரப் பணிகள் சிறக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாகப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சிகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இரு தரப்பினரும் பரஸ்பர அக்கறையுள்ள விடயங்கள் குறித்துத் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் துணை உயர்ஸ்தானிகர் திருமதி சுனைரா லத்தீப் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
