கிளாஸ்கோவில் இன்று (30) நடைபெற்ற 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான வட்டு எறிதல் F42-44/F61-64 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், இலங்கை மாற்றுத்திறனாளி தடகள வீரர் பாலித பண்டார நாட்டிற்கான முதல் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.
இறுதிப் போட்டியில், பண்டார 46.84 மீற்றர் தூரத்திற்கு வட்டு எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். வேல்ஸின் அலெட் டேவிஸ் தங்கப் பதக்கத்தையும், டிரினிடாட் மற்றும் டொபாகோவின் அகீம் ஸ்டீவர்ட் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பர்மிங்காம் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, பண்டாரவின் இரண்டாவது தொடர்ச்சியான பொதுநலவாய விளையாட்டு வெள்ளிப் பதக்கம் இதுவாகும். அவரது 46.84 மீற்றர் எறிதல், இலங்கை தடகள வீரரின் தனிப்பட்ட சிறந்த சாதனையாகவும் அமைந்துள்ளது.
வரவிருக்கும் நாட்களில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க மற்றும் சுமேத ரணசிங்க ஆகியோர் போட்டியிட உள்ள நிலையில், இலங்கை மேலும் பதக்கங்களைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
