கொழும்பு, ஜூன் 16: தேசிய புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
HRCSL ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா இது குறித்துத் தெரிவிக்கையில், இந்த விசாரணையின் ஒரு பகுதியாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று (16) மீண்டும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகக் உறுதிப்படுத்தினார்.
சுரேஷ் சல்லே சிஐடி காவலில் வைக்கப்பட்டிருந்தபோது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டதைத் தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, சல்லே அடைத்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு அறையை ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வில், அவர் ஒரு சாதாரண சிஐடி தடுப்பு அறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அதில் போதிய காற்றோட்டம் இல்லாதது உள்ளிட்ட பல அடிப்படை குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து சிஐடி அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக HRCSL குறிப்பிட்டுள்ளது.
விசாரணையின் தொடர்ச்சியாக, சல்லேக்கு அருகிலுள்ள அறைகளில் அடைக்கப்பட்டிருந்த பிற கைதிகளிடமும், பல சிஐடி அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் மேலும் சிஐடி பணியாளர்களிடம் இருந்து மேலதிக வாக்குமூலங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சல்லேக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சையை ஆணைக்குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.
