வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் தகவலின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மழை
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
பலத்த மழை எச்சரிக்கை
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் மழை
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
பலத்த காற்று வீசக்கூடும்
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்களுக்கான எச்சரிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
