இலங்கைக்கு அருகாமையில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனடிப்படையில், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், ‘அம்பர்’ (Amber) நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
