தம்புத்தேகம நீர்வழங்கல் திட்டம் இன்று (ஜூலை 10) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படுகிறது. அங்கமுவ நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரைப் பெற்று, தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்னேவா பகுதிகளில் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரை வழங்க இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தம்புத்தேகம பிரதேச செயலகப் பிரிவு முழுவதற்கும், அத்துடன் தலாவ மற்றும் கல்னேவா பிரதேச செயலகப் பிரிவுகளின் சில பகுதிகளுக்கும் சேவை வழங்குகிறது.
இந்தத் திட்டம் 42 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதுடன், 91,810 பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 25,000 புதிய நீர் இணைப்புகள் மூலம், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நம்பகமான, உயர்தர குடிநீர் கிடைக்கும்.
அனுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளும் இன்று ஜனாதிபதியின் தலைமையில் கெபித்திகொள்ளேவ நீர்வழங்கல் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டம் பதவிய, ஹொரவ்பொத்தான, கஹட்டகஸ்திகிலிய மற்றும் கெபித்திகொள்ளேவ பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய 119 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டதாக அமையும். இது 2034 ஆம் ஆண்டளவில் 170,951 மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50,000 புதிய வீட்டு நீர் இணைப்புகளை வழங்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாகும். அதிக ஃப்ளோரைட் அளவு கொண்ட நிலத்தடி நீரை நுகர்வதால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளைக் குறைக்கவும், நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் திட்டம் இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகவரகத்தின் (JICA) கூட்டுத் திட்டமாகும்.
