பாரம்பரிய மோட்டார் காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகளை அறிமுகப்படுத்த காப்புறுதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைவாணையம், இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் காப்புறுதித் துறையின் ஏனைய பங்குதாரர்களால் கூட்டாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதுடன், தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.
இதன்படி, மோட்டார் காப்புறுதித் தகவல்கள் இனி மூன்று வழிகளில் வழங்கப்படும்:
- டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை.
- காப்புறுதிதாரரின் கோரிக்கையின் பேரில் மாத்திரம் வழங்கப்படும் அச்சிடப்பட்ட சான்றிதழ்.
- கைபேசி செயலி (Mobile Application) மூலம் காப்புறுதிதாரருக்கு வழங்கப்படும் டிஜிட்டல் காப்புறுதி அட்டை.
இதேவேளை, டிஜிட்டல் காப்புறுதி அமைப்புடன் இணைந்து தேசிய காப்புறுதி சரிபார்ப்பு அமைப்பு (National Insurance Verification System) ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் காப்புறுதியின் செல்லுபடியாகும் தன்மையைச் சரிபார்க்க இந்த அமைப்பை பல முறைகள் மூலம் அணுகலாம்.
இதன்படி, எந்தவொரு கைபேசி வலையமைப்பிலிருந்தும் 1338 ஐ டயல் செய்து, வாகன இலக்கம் அல்லது காப்புறுதிச் சான்றிதழ் இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் காப்புறுதிக் கொள்கையின் தற்போதைய நிலையைச் சரிபார்க்கலாம்.
கூடுதல் முறையாக, பயனர்கள் வாகன இலக்கம் அல்லது காப்புறுதிக் கொள்கை இலக்கத்தை *1338# என்ற இலக்கத்திற்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பலாம், அதன் பிறகு காப்புறுதிக் கொள்கையின் நிலை உடனடி பதில் செய்தியாக அனுப்பப்படும்.
