கொழும்பு – ஜூலை 11, 2026
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (11) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக உள்நாட்டில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
