“21ஆம் நூற்றாண்டு இலங்கையிலும் அதற்கு அப்பாலும் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற கருப்பொருளில், கொழும்பு கிறிஸ்து ஜீவனுள்ள இரட்சகர் பேராலயத்தில் (Cathedral of Christ the Living Saviour) நடைபெற்ற பேராயர் சிரில் அபேநாயக்க நினைவுச் சொற்பொழிவை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நிகழ்த்தினார்.
கொழும்பு ஆயர் அதி வணக்கத்திற்குரிய துஷாந்த ரொட்றிகோ அவர்களின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர், அங்கிலிக்கன் திருச்சபையினால் பிரதிபலிக்கப்படும் இலங்கையின் செழுமையான பல்லின, பன்முகத்தன்மை கலாசாரத்தை தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் கல்விக் கொள்கையின் வரலாற்றுப் போக்கை பிரதமர் தனது உரையில் மறுபரிசீலனை செய்ததாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
1971 ஆம் ஆண்டின் முக்கிய ILO சீர்ஸ் அறிக்கையை (ILO Seers Report) அவர் சுட்டிக்காட்டினார். அந்த அறிக்கை, நாட்டின் பொருளாதார சவால்களை “திறன் பொருத்தமின்மை” (skills mismatch) மற்றும் அரச துறை வேலைவாய்ப்புகளுடன் தொடர்புடைய “வரிசையில் நிற்கும் நிகழ்வு” (queuing phenomenon) ஆகியவற்றின் மூலம் விளக்கியிருந்தது.
சந்தைக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அடுத்தடுத்த தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்), தொழில்நுட்பக் கல்வி மற்றும் “மென் திறன்கள்” (soft skills) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்த போதிலும், இந்த முயற்சிகள் அடிப்படைக் கட்டமைப்பு நெருக்கடிகளைத் தீர்க்கத் தவறிவிட்டன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கன்னங்கரா சீர்திருத்தங்களின் (Kannangara Reforms – 1943–1947) அடிப்படைக் கொள்கைகளுக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இலவசக் கல்வி என்பது வெறும் கார்ப்பரேட் நலன்களுக்காக எதிர்காலத் தொழிலாளர்களைப் பயிற்றுவிப்பதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை என்று அவர் வலியுறுத்தினார். மாறாக, அதன் தொலைநோக்கு நோக்கம், வலுவான ஜனநாயகத்திற்கு அவசியமான, அரசியல் விழிப்புணர்வு, நெறிமுறை மற்றும் விமர்சன ரீதியாக சிந்திக்கும் குடிமக்களை உருவாக்குவதாகும்.
“கல்வி என்பது புதிதாக சுதந்திரம் பெற்ற ஜனநாயக தேசத்திற்குத் தேவையான குடிமக்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது” என்று பிரதமர் கூறினார். இலவசக் கல்விக்கு மேல்தட்டு மக்களிடமிருந்து ஆரம்பகால எதிர்ப்பு இருந்தது, இது கிராமப்புற ஏழைகளின் சமூக முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்மொழியப்பட்ட அரச சீர்திருத்தங்கள் தீர்க்க முற்படும் ஐந்து அடிப்படை நெருக்கடிகளை பிரதமர் அடையாளம் காட்டினார்:
- மேல்தட்டு மற்றும் மேல்தட்டு அல்லாத கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரிப்பு.
- அரசியல் முதிர்ச்சி, பகுப்பாய்வு மற்றும் சமூகப் பொறுப்புள்ள குடிமக்களை வளர்ப்பதில் ஏற்பட்ட வரலாற்றுத் தோல்வி.
- பெண்களின் சிறந்த கல்வித் திறனுக்கும் அவர்களது குறைந்த தொழிலாளர் பங்கேற்புக்கும் இடையிலான முரண்பாடு (வீட்டுப் பராமரிப்புப் பணிகளின் சமமற்ற சுமையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது).
- செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப இடையூறுகளுடன் வேகத்தை ஈடுசெய்ய வேண்டியதன் அவசரம்.
- கல்வியை ஒரு வாழ்க்கை அனுபவமாகப் பார்க்காமல், வெறும் சான்றிதழ்களைப் பெறுவதற்கான ஒரு வியாபார நடவடிக்கையாகப் பார்க்கும் மனப்பான்மை.
செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ப மாற்றுவதற்கு வெறும் மேலோட்டமான பாடத்திட்ட மாற்றங்கள் மட்டும் போதாது, அதற்கு ஆழமான கட்டமைப்பு மாற்றம், மேம்பட்ட டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் வலுவான ஆன்லைன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்று பிரதமர் வலியுறுத்தினார்.
எதிர்காலப் பாதை குறித்து விளக்கிய பிரதமர், பாடத்திட்டங்களை மாற்றுவதன் மூலம் மட்டும் அர்த்தமுள்ள கல்விச் சீர்திருத்தத்தை அடைய முடியாது, அதற்கு முழு அமைப்பிலும் ஒரு கலாசார மாற்றம் தேவை என்று வலியுறுத்தினார். மாணவர்களுக்குக் கல்வி புதிய பாதைகளையும் வாய்ப்புகளையும் திறக்க வேண்டும். பெற்றோர்கள் கல்வி நிறுவனங்களை நம்பக்கூடிய வகையில் அமைப்பின் மீது நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். கற்பித்தல் என்பது மதிப்பிற்குரிய தொழிலாக மாற்றப்பட வேண்டும், அது வெறுமனே ஒரு “fallback” பணிவாய்ப்பாகப் பார்க்கப்படக் கூடாது.
கல்விச் சீர்திருத்தத்தின் இறுதி இலக்கு, மதம், பொருளாதாரம், அரசியல், கலை மற்றும் சமூக வாழ்க்கை உட்பட அனைத்துத் துறைகளிலும் பொதுமக்கள் மதிக்கக்கூடிய மற்றும் நம்பக்கூடிய தலைவர்களை உருவாக்குவதாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், உலகத்தை மாற்றுவதற்காக அதைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்வதே கல்வியின் அடிப்படை என்று கூறித் தனது உரையை முடித்தார். சமூகம் ஒருவருக்கொருவர் தைரியமான மற்றும் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடும்போது மட்டுமே இத்தகைய இலக்கை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
