உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டதற்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கும் எதிராக முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே தாக்கல் செய்த ரிட் மனு மீதான மறுபரிசீலனை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, மனுதாரர் சுரேஷ் சல்லே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலதிக சமர்ப்பணங்களை மேற்கொண்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து, மனு தொடர்பான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் மேலதிக தகவல்களைச் சமர்ப்பிக்க ஜனாதிபதி சட்டத்தரணிக்கு அறிவுறுத்தியது.
