2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை, நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளின் வருகை அட்டவணைகள், அந்தந்த பாடசாலைகள் மூலம் சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரிகளின் தகவல்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், அதனை இன்று (23) முதல் ஆகஸ்ட் 03 ஆம் திகதி வரை ஆன்லைனில் மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான ‘www.doenets.lk’ க்குச் சென்று, “Our Services” பிரிவின் கீழ் உள்ள “Exam Information Centre” அல்லது ஆன்லைன் பரீட்சை சேவை அமைப்பு மூலம் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
