போதைப்பொருள் ஒழிப்பிற்காகச் சகல பொறுப்புவாய்ந்த நிறுவனங்களும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) காலை நடைபெற்ற ‘ஒன்றிணைந்த தேசம்’ (A Nation United) போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய வழிகாட்டல் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் முப்பீட மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
தேசிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள், இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த அறிக்கையை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
- சிறைச்சாலை நெரிசல் மற்றும் புனர்வாழ்வு: சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் சுமார் 70 சதவீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது இந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது. எனவே, சிறைச்சாலையில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் வகையில், இவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்துத் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. இதற்கான சட்டமூலம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
- பாடசாலை மாணவர் பாதுகாப்பு: மாணவர்களைப் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காகக் கல்வி அமைச்சின் தலைமையில், அனைத்துத் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும், தேசிய போதைப்பொருள் தடுப்புத் திட்டத்தில் தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளையும் இணைத்துக் கொள்வதற்காக அதன் உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- வீட்டுப் பரிசோதனைக் கருவிகள் (Testing Kits): பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைத் தாங்களே இரகசியமாகப் பரிசோதித்து அறிந்துகொள்ள வசதியாக, மருந்தகங்கள் ஊடாகப் பரிசோதனைக் கருவிகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
- சட்டத் திருத்தங்கள் மற்றும் விசாரணைகளைத் துரிதப்படுத்தல்: கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை தாமதமின்றி உடனடியாக அழிப்பதற்கான புதிய சட்டங்களை உருவாக்குவது குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், நீதிமன்ற சான்றுப் பொருட்களை நிர்வகிப்பதற்கு ஒரு தானியங்கி முறைமையை (Automated system) அறிமுகப்படுத்தவும், ஆய்வக வசதிகளைப் பரவலாக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
- கடல்வழி கடத்தலைத் தடுத்தல்: கடல் மார்க்கமாகப் போதைப்பொருள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து விசேட கூட்டு நடவடிக்கைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த உள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் உள்ளிட்ட வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்வதற்கான சட்ட அதிகாரங்களை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கு (PNB) நவீன வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் வினைத்திறனை மேம்படுத்துதல் போன்ற விடயங்களும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.
