முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், விமான நிலையங்கள் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண வருஷ விதான என்பவரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவனான நதுன் சிந்தக எனப்படும் ‘ஹரக் கட்டா’ என்பவருடன் தொடர்புடைய விவகாரத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’வை, குறித்த தடுப்புக் காவல் உத்தரவுகளில் இருந்து விடுவித்து, வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காகவும், அவரை ஒரு சாதாரண கைதியாக நடத்துவதற்காகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்குவதற்காக பல மில்லியன் ரூபாய்களை (சுமார் 12 முதல் 20 மில்லியன் ரூபா வரை) இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
